கேளாத கதை (வ.உ.சி.யின் சிறை போராட்ட வரலாறு)
அதிகாரபூர்வமான காங்கிரஸ் சரித்திர நூலில் வ.உ.சி. குறித்து ஒரு வரி இல்லை. 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட காந்திஜி தொகுப்பிலும் இவரது பெயர் இல்லை. இச்சூழலில் இந்நூல் சிறந்த ஆவணமாகவே கருதப்படும்.
கேளாத கதை (வ.உ.சி.யின் சிறை போராட்ட வரலாறு)-குருசாமி மயில்வாகனன்; பக்.1000, ரூ.1,500; நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்; தொண்டி-623 409; ✆ 80720 89186.
நூலாசிரியர் குருசாமி மயில்வாகனன் இதற்கு முன்பு வ.உ.சி. குறித்து எழுதிய கப்பலோட்டிய கதை (2021), தோழர் வ.உ.சி (2022), தற்போது கேளாத கதை என்ற பெயரில் வ.உ.சி. யின் சிறை வாழ்க்கை குறித்த ஆய்வுகள் மூலம் தனித்துவம் பெறுகிறது.
12.3.1908 -இல் கைது செய்யப்பட்டு 24.12. 1912 அன்று விடுதலை செய்யப்பட்ட காலம் வரை மொத்தம் 1,449 நாள்கள் வ.உ.சி. சிறையில் இருந்திருக்கிறார். பாளையங்கோட்டை, கோவை, கண்ணனூர் சிறைகளில் நான்கு ஆண்டுகள் கழித்திருக்கிறார். சிறையில் மற்றவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புகிறார். அங்கு தனக்கான உரிமைகளுக்காக தினமும் மோதுகிறார். வெளியிலோ அவரது சுதேசி கப்பலை அரசு முடக்குகிறது. குடும்பமே வறுமையில் வாடுகிறது.
Advertisement
Advertisement
இந்நூல் அவரது சுயசரிதை, உளவு போலீஸ் குறிப்புகள், ஆஷ் கொலை வழக்கு அறிக்கை, பத்திரிகைக் குறிப்புகள், திருநெல்வேலி கழகம் ஆகியவை மூலம் தேதி வாரியாக திரட்டிய குறிப்புகளைக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூலின் தலைப்பு வ.உ.சி. குறித்து பாரதி எழுதிய கவிதையில் இருந்து எடுத்ததாகும். இரு பாகங்களாக வெளிவந்துள்ள முதல் பகுதி சிறை வாழ்க்கை (476 பக்கங்கள்); பகுதி 2 (520 பக்கங்கள்) முழுவதும் மேற்கோள்கள், சான்றுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமான காங்கிரஸ் சரித்திர நூலில் வ.உ.சி. குறித்து ஒரு வரி இல்லை. 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட காந்திஜி தொகுப்பிலும் இவரது பெயர் இல்லை. இச்சூழலில் இந்நூல் சிறந்த ஆவணமாகவே கருதப்படும்.