திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோவிலில் மாசி மக உற்ஸவம் தொடக்கம்
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் மாசிமக உற்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் மாசிமக உற்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் 5 நாள் விழாவாக மாசி மக உற்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலை பல்லக்கில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் வீதியுலாவுக்கு எழுந்தருளினார். மாலை சூரிய, சந்திர பிறையில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
2-ம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு கருட வாகனத்திலும், 3-ம் நாள் சனிக்கிழமை மாலை ஹனுமந்த வாகனத்திலும், 4-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பல்லக்கில் வெண்ணெய்த்தாழி சேவையாகவும் புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை வெட்டுங் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 5-ம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீ ரகுநாதப் பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகியவை திருப்பல்லக்கில், திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாள் தலைமையில் பட்டினச்சேரி கடற்கரைக்கு சென்று சமுத்திர தீர்த்தவாரியில் ஈடுபடுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ரகுநாதப் பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.