அட அப்படியென்ன சிறப்பு இந்த ஆவணி மாதத்தில்...!
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி பூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பூணூலைக் கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வர்.
விநாயக சதுர்த்தி
விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. விநாயகரைப் போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.
ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு
ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.
விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.
ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் ஆவணியில் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகிப் பூஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோமாக.