அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185-வது ஆண்டு ஆடித் திருவிழா
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185-வது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185-வது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் கொடிபட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடிமரத்தை 5 முறையும் வலம் வந்தது. பின்னர் காலை 6.20 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை இணைத்தலைவர் சிங்கபாண்டி ஆடித்திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும், மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடைபெற்றது. இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவையட்டி மூன்று வேலையும் அன்னதர்மம் நடைபெற்றது.
இந்த ஆடித்திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில், தினசரி பகலில் உச்சிப்படிப்பு, பணிவிடையும், மாலையில் திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, பணிவிடையும் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 11ம் திருநாள் தேரோட்டம் வருகிற 31ந் தேதி பகலில் நடக்கிறது. தேரோட்டத்தை, முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் வள்ளீயூர் தர்மர், பொருளாளர் ராமையா, துணை செயலாளர் ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் வக்கில் சந்திரசேகரன், இணைத் தலைவர்கள் சிங்கபாண்டி, தோப்புமணி, விஜயகுமார், அய்யாபழம், இணை செயலாளர்கள் வரதராஜபெருமாள், கனகவேல், செல்வின், பொன்னுதுரை மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.