நோய் நீங்கி மிளர்ந்த மேனியுடனும் ஒற்றைக் கண் பார்வையுடனும் திருவாரூர் சென்றார் சுந்தரர். திருவாரூர் திருக்கோயில் கோபுரம் தொழுது உள் புகுந்தார். பூங்கோயில் என்று வழங்கப் பெறும் அத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தியாகேசனை வணங்கினார்.
"எனக்கு மற்றொரு கண்ணிலும் பார்வை தா!'' என மனதாரப் பணிந்தார். இறைஞ்சினார்.
பக்தனின் குறை கேட்ட பரமேஸ்வரன், அருள் சுரந்து இரு கண்ணும் முழுமையாய்க் காண பார்வை தந்தருளினார்.
திருவாரூரில் வலது கண்ணிலும் பார்வை வேண்டி சுந்தரர் பாடிய பதிகம்:
"மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.''
திருவாரூர் தலத்தினைச் சென்றடையும் வழி:
மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன. இருப்புப் பாதை நிலையம் உண்டு.
இறைவன் - வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார். இறைவி - கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள். |