குரு மேடு உங்கள் கையில் எப்படி இருக்கிறது?
உள்ளங்கையை விரித்தவுடன் எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாய் உயர்ந்து காணப்படுகிறது...
குருமேடு கோபுரமாகவும், தனரேகை தாராளமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உங்க கையில் குருமேடு எப்படி இருக்கிறது?
உள்ளங்கையை விரித்தவுடன் எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாய் உயர்ந்து காணப்படுகிறது என்பதை வைத்து ஒருவருடைய குணநலன்களை தெரிந்துக் கொள்ளலாம். எந்தெந்த மேடுகள் பலமாக உள்ளன, எவை பலம் இழந்து உள்ளன என்பதை வைத்தும் ஒருவருடைய குணநலன்கள் அறிந்து கொள்ளப்படுகிறது. அதில் குரு மேடு பற்றிப் பார்ப்போம்.
குரு மேடு
குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். குரு மேடு உப்பலாக இருந்தால் உச்சமேடு எனவும், பள்ளமாக இருந்தால் நீச்ச மேடு எனவும், சமமாக இருந்தால் நடுத்தர மேடு எனவும் அழைக்கப்படுகிறது.
குரு மேடு உச்சமாக இருந்தால் நல்ல பலன்களாக இருக்கும். நீச்சமாக இருந்தால் கெடு பலன்களையும், சமமாக இருந்தால் நல்லவை, கெட்டவை இரண்டும் சமமாக நடக்கும். இந்த மேடு கையில் நன்றாக அமைந்து இருந்தால் நடுத்தர உயரமாக இருப்பார்கள். ஆரோக்கியமான தேகம் மற்றும் நடை கம்பீரமாக இருக்கும்.
குணநலன்கள்
• மற்ற மேடுகளை விட குருமேடு உயர்ந்து இருந்தால் நியாயவாதிகளாகவும், நேர்மை, நாணயம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
• இவர்கள் உபதேசம் செய்வதில் திறமை உள்ளவர்களாகவும், பேராசிரியர்களாகவும், உயர்ந்த லட்சியங்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து பேசும் சுபாவம் உடையவர்களாகவும், யாருக்கும் கட்டுபட விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.
• சமூக சேவை, அரசியல், அழகிய பொருட்கள் மேல் பிரியம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். சுத்தம், சுகாதாரத்தில் அக்கறையும் தனது காரியத்தில் மிகுந்த கவனமும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
• எதிலும் முதன்மையாக இருக்க ஆர்வம் கொண்டவர்கள். பணிந்து போவதில் விருப்பம் இல்லாதவர்கள். இவர்கள் தன்மானம் உடையவர்கள். பிறர் பரிகாசம் செய்வதை வெறுப்பார்கள்.
• எந்தத் துறையில் இருந்தாலும் அதிர்ஷ்டமுள்ளவராகத் திகழ்வார். விடா முயற்சி, ஆற்றல் பெற்றவர்கள் தங்கள் வருமானத்தை பொதுநலம், தெய்வ காரியங்களுக்கு செலவிட தயங்க மாட்டார்கள்.