முகப்பு
ஆன்மிகம்

சந்திராஷ்டம தினத்தில் "மௌனமே மகா மருந்து'

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சந்திரன் நிலைபெறும் காலம்.

Updated On : 13 அக்டோபர், 2017 at 12:35 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:22 PM

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சந்திரன் நிலைபெறும் காலம். இவ்வாறு சந்திரன் நிலைபெறும் காலம் இரண்டே கால் நாள்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரனையும், அஷ்டமம் என்பது எட்டாமிடத்தையும் குறிக்கும்.

சந்திரனை "மனோகரன்' என்றும் போக்குவரத்துக்குக் காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சந்திரன் எப்போதுமே மந்த புத்தி உடைய கிரகம். அந்த மனோகரன் 8-இல் மறையும்போது மன உளைச்சல், கோபம், ஆத்திரம், மறதி, எரிச்சல், பொறுமையிழத்தல் போன்ற எதிர்மறையான குணங்களைத் தருவார். இப்படிப்பட்ட காலங்களில் வாகனங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்திராஷ்டமம் என்பது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் ஒரு சிறு தோஷம். உதாரணமாக, ஒருவருக்கு விருச்சிக ராசி ஜென்ம ராசி என்றும், அனுஷம் ஜென்ம நட்சத்திரம் என்றும் அமைந்துள்ளது என்றால், விருச்சிகத்துக்கு 8-ஆம் ராசியான மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். வேறொரு ஜோதிட கணிதப்படி, குறிப்பிட்ட ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 17-வது நட்சத்திரம் முதல் உள்ள காலம் சந்திராஷ்டமம் ஆகும்.

Advertisement

இது ஜோதிடக் கலையில் துல்லியமான கணக்கீட்டு முறையாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும் நாள்களில் சுப நிகழ்ச்சிகளையும், முக்கிய முடிவுகள் எடுப்பதையும், கடன்
கொடுப்பது-வாங்குவது போன்றவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். கூடுமானவரை "மௌனமே மகா மருந்து' என்று நினைத்து அன்றைய நாள்களில் யாரிடமும் அதிகம் பேசாமல், இறைவனை தியானித்தபடி, முடியுமானால் மௌனவிரதம் இருப்பதும்தான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி!

சந்திராஷ்டமத்தை எதிர்கொள்ள எளியப் பரிகாரம்:

அரிசி மாவை நீரில் குழைத்து உடல் முழுதும் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வழக்கமான முறையில் குளித்து விட்டு, மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெள்ளை பிளாஸ்திரியை மிகச் சிறிய அளவில் வெட்டி, அதில் ஒரு நெல் மணியை வைத்து நம் இடது கை புஜத்தில் ஒட்டிக் கொண்டு அன்றாட அலுவல்களைக் கவனிக்கலாம்.

எளிமையான பரிகாரம், ஆனால் மிகச் சக்தி வாய்ந்ததாகும். மேலும் சந்திராஷ்டம நாளில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்வது முக்கியமான ஒன்று. அந்த நாட்களில் நிலவைத் தொடர்ந்து இருபது நிமிடங்கள் தரிசித்து வருவதும் நல்ல பலன் தரும். அதே போல் நம் தலை நடு உச்சி பாகத்தில் 20 முறை இடது கை ஆட்காட்டி விரலால் அழுத்தம் கொடுத்து கொள்வதும் நன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.