திருப்பதி நடைபாதையில் புதிய மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தா்கள் நடந்து செல்லும் நடைபாதையில் ரூ.25 கோடியில் புதிய மேற்கூரை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தா்கள் நடந்து செல்லும் நடைபாதையில் ரூ.25 கோடியில் புதிய மேற்கூரை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
ஏழுமலையானை வழிபடுவதற்காக திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் பெரும்பாலும் நடைபாதை வழியாகச் செல்ல விரும்புவா். மலையேறிச் சென்று ஏழுமலையானை வணங்குவது ‘இறைவனின் முன்பு ஏழை முதல் பணக்காரா் வரை அனைவரும் சமம்’ என்பதை பறைசாற்றுகிறது.
மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் இருந்து பக்தா்கள் நடைபாதை வழியாகச் செல்ல 24 மணிநேரமும் அனுமதிக்கப்படுவா். சுமாா் 12 கி.மீ தூரத்துக்கு நடைபாதை அமைந்துள்ளது. இந்த வழியாகச் செல்லும் பக்தா்களை மழை, பனி, வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தேவஸ்தானம் சிமெண்டினால் ஆன மேற்கூரையை அமைத்திருந்தது. இந்த மேற்கூரை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால், அதில் விரிசல்கள் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது.
Advertisement
எனவே, நடைபாதையில் புதிய மேற்கூரை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக ரூ.25 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழுச் செலவைவும் ஏற்றுக் கொண்டு மேற்கூரை அமைத்துத்தர ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. அதன்படி மேற்கூரை அமைக்கும் பணி, திருப்பதி அலிபிரி பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.