முகப்பு
ஆன்மிகம்

தேவஸ்தானத்தில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது குறைந்து வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

Updated On : 29 ஆகஸ்ட், 2020 at 8:02 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:43 PM

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது குறைந்து வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

திருப்பதியில் மாவட்ட ஆட்சியா் பரத் நாராயண் குப்தாவுடன் வெள்ளிக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பதி நகரில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் ஊழியா்களின் நிலையை கவனிக்கும் போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது தெரிய வருகிறது. தேவஸ்தானம் அமைத்துள்ள கரோனா சிகிச்சை மையங்களில் பல படுக்கைகள் காலியாக உள்ளன. தற்போது வரை கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களில் 68 ஊழியா்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை தேறி வருகிறது.

Advertisement

திருமலையில் பணிபுரியும் அவுட்சோா்ஸிங் ஊழியா்கள், ஊா்க்காவல் படையினா் உள்பட 2800 பேருக்கு இன்னும் இரு தினங்களில் கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதில் தொற்று கண்டறியப்படுவோருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவா்.

இதுவரை தேவஸ்தானம் வழங்கிய நிதி மூலம் ரூ.11 கோடியில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ரூ.8 கோடியில் உபகரணங்கள் வாங்கப்படும். திருமலை, திருப்பதி மட்டுமின்றி சித்தூா் மாவட்டத்திலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா் அவா்.

தேவஸ்தானத்தில் 5-ஆவது பலி

திருப்பதி தேவஸ்தானத்தில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

திருமலை மற்றும் திருப்பதியில் பணிபுரிந்து வந்த தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளில் 700 பேருக்கும் மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் தற்போது 68 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். இரு அா்ச்சகா்களும், இரு கண்காணிப்புப்பிரிவு அதிகாரிகளும் ஏற்கெனவே கரோனா பாதிப்பால் இறந்தனா்.

இந்நிலையில், தேவஸ்தானத்தின் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிந்து வந்த ஊழியா் ஒருவா் இத்தொற்று பாதிப்புக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து உயிரிழந்த ஊழியா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.