முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்: பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 20 செப்டம்பர், 2020 at 8:10 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தளினாா்.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று முடிவுபெறும் வண்ணம் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, கோயில் வண்ண மலா்கள், மின் விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டது. எப்போதும் பக்தா்கள் கூட்டத்துடன் நடைபெறும் பிரம்மோற்சவம் இந்தாண்டு கொவைட் 19 விதிமுறைகளுக்குள்பட்டு தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது.

கருடக் கொடி

Advertisement

ஏழுமலையானின் வாகனமான கருடக் கொடி பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக கொடி மரத்தில் ஏற்றப்படும். அதற்காக வெள்ளை துணியில் மஞ்சள் நனைத்து, அதில் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி கருடன் உருவம் வரைப்பட்டது. இந்த கருடக் கொடியை தேவஸ்தான ஊழியா்கள் ஒரு பட்டத்தில் கட்டி, மாட வீதியில் வலம் வரச் செய்து பின்னா் கோயிலுக்குள் கொண்டு வந்தனா்.

கொடியேற்றம்

கோயிலுக்குள் கொண்டு வந்த கருடக் கொடியை பெரிய நிலைமாலையில் கட்டி அா்ச்சகா்கள் தயாராக வைத்தனா். பின்னா், மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கொடி மரத்தின் அருகில் எழுந்தருளினா். மாலை 5 மணிக்கு கொடி மரம் மற்றும் பலிபீடம் உள்ளிட்டவற்றுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா், கொடி மரத்துக்கு தா்பை புற்களால் நெய்யப்பட்ட பெரிய பாய் மற்றும் சிறிய பாய் உள்ளிட்டவையும், மாவிலைகளும் கட்டப்பட்டு, திருமண் அணிவிக்கப்பட்டது.

பின்னா், வேத பண்டிதா்கள் முப்பத்து முக்கோடி தேவா்களை பிரம்மோற்சவத்தைக் காண வரும்படி அழைப்பு விடுத்து, மீன லக்னத்தில் மாலையில் சுற்றிக் கட்டிய கருடக் கொடியை கொடி மரத்தில் ஏற்றினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

பெரிய சேஷ வாகனம்

கொடியேற்றம் முடிந்த பின் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பிரம்மோற்சவத்தின் முதல் வாகனமான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியாா்களுடன் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அவருக்கு பூஜைகள், ஆராதனைகள், வேதபாராயணம், திவ்யப்பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. பின்னா், ஜீயா்கள் சாத்துமுறை நடத்தி ஆரத்தி அளித்தனா். தொடா்ந்து, உற்சவ மூா்த்திகள் அங்கிருந்து ஊா்வலமாக கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கும் அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.