முகப்பு
திருப்பாவை

திருப்பாவை - பாடல் 17

எங்கள் அனைவருக்கும் ஆடை, தண்ணீர் மற்றும் சோறு

Updated On : 1 ஜனவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:21 PM

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம் பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொன் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

 
பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

வாயில் காப்பானது அனுமதி பெற்று உள்ளே நுழைந்த சிறுமிகள், உறங்கிக்கொண்டு இருக்கும், கண்ணனின் பெற்றோர்களாகிய நந்தகோபன் மற்றும் யசோதை ஆகிய இருவரையும் எழுப்பி அவர்களின் அனுமதியுடன் பலராமனை எழுப்பி, அவனை முன்னிட்டுக்கொண்டு கண்ணனை எழுப்பலாம் என்று தங்கள் திட்டத்தை வெளிப்படுத்தும் பாடல்

Advertisement

பொழிப்புரை

எங்கள் அனைவருக்கும் ஆடை, தண்ணீர் மற்றும் சோறு முதலானவற்றை அறமாக அளித்து எங்களைக் காக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே, நீர் எழுந்திருப்பீராக; வஞ்சிக் கொடி போன்ற ஆயர்குலப் பெண்களின் குலக்கொழுந்தாகவும், தான் பிறந்த ஆயர் குலத்தின் விளக்கு போன்று பிரகாசிப்பவரும், எங்களது தலைவியாகவும் விளங்கும் யசோதை அன்னையே, நீர் உமது துயில் கலைந்து, உணர்வு பெற்றவராகத் திகழ வேண்டுகின்றோம். வானினையும் ஊடறுத்து, அதனைத் தாண்டி ஓங்கி நின்றவனாய் மூன்று உலகங்களையும் தனது இரண்டு திருவடிகளால் அளந்தவனே, தேவர்களின் தலைவனே, நீர் உமது உறக்கத்திலிருந்து விழித்து எழ வேண்டும்; செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்களை அணிந்த செல்வன் பலதேவரே, நீரும் உமது தம்பியாகிய கண்ணபிரானும், இனியும் உறங்கலாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.