முகப்பு
கட்டுரைகள்

நாகை மாவட்டம் ஹரிஹரன்கூடல் சிவன் கோயில்  

சிவனும் விஷ்ணுவும் கூட வேறில்லை. ஆனாலும், இரண்டையும் வழிபடுகிறபோது

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:48 AM
பகிர்:

இறைவன்- பீமேஸ்வரர் 
இறைவி- அதுல்யகுஜாம்பிகை

எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான்!

சிவனும் விஷ்ணுவும் கூட வேறில்லை. ஆனாலும், இரண்டையும் வழிபடுகிறபோது கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதில் ஒரு ரஸம் இருக்கத்தான் செய்கிறது. ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து என்கிறார் போல் (UNITY IN DIVERSITY) பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையாக இருப்பதுதான் நம் மதத்தின் சாரம். நாட்டின் ஒருமைப்பாட்டின் உட்பொருளும் அதுவே.

அதாவது சிவத்தை பரப்பிரும்மமாகவும் விஷ்ணுவை பராசக்தியாகவும் பாவிக்கலாம். சங்கர நாராயண வடிவத்தையும், அர்த்த நாரீச்வரர் வடிவத்தையும் பார்த்தால் இது புரியும். இரண்டு உருவத்திலும் வலப்பாகம் பரமேச்வரனுடையது. இடப்பாகம் அம்பாள். சிவனை எல்லாவற்றுக்கும் அடிப்படையான Nucleus எனலாம்.

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் இலுப்பூர் தாண்டி தெற்கில் இரண்டு கிமி தூரம் செல்லும் சாலை ஹரிஹரன்கூடலை அடைகிறது. ஒரு நீண்ட தெருவில் ஹரியின் கோயில் கிழக்கு நோக்கியும், ஹரனின் கோயில் மேற்கு நோக்கியும் உள்ளது இதுவே ஹரிஹரன்கூடல்.

பல ஆறுகள் சேருமிடம் இந்துமாக்கடல், பல மதங்கள் சேருமிடம் இந்து மதக்கடல்.ஒரு மதத்திற்க்குள் பிரிவு வேண்டாம் ஒன்றுபட்டு இருங்கள் என பெரும் தத்துவத்தினை உலகுக்கு உணர்த்தும் இவ்வூர் அமைதியான சிற்றூராக இருக்கிறது.

மேற்கு நோக்கிய சிவன்கோயில் மூன்று நிலை கொண்ட முதன்மை கோபுரம். வாயில் கதவினை திறந்தவுடன் ஒரு ஏக்கர் வளாகத்தில் பல பல சிற்றாலயங்கள் நிறைந்துள்ளன. முதலில் இடதுபுறம் அம்பிகை சிற்றாலயம் தெற்கு நோக்கி உள்ளது. நேர் எதிரில் முகப்பு மண்டபத்துடன் இறைவனின் திருக்கோயில்.

சற்று முன்னே சென்றால் வலது புறம் இரட்டை விநாயகர் கொண்ட திருக்கோயில். இடதுபுறம் சுப்ரமணியர் ஆலயம், அதன் நேர் எதிரில் காசி விஸ்வநாதர் - விசாலாட்சி ஆலயம் சிறியதாய் உள்ளது. அவருக்கு தனி சண்டேசர் சன்னதி, பின்புறம் நவகிரகம், பைரவர், சனி சூரியன், அனைவருக்கும் சிறு ஆலயம் கொண்டுள்ளனர்.

இறைவன் துவி தள விமானம் கொண்டு அழகிய நடுத்தர அளவு கொண்ட லிங்க மூர்த்தியாக உள்ளார்.அவரின் கருவறை கோட்டங்களில் துர்க்கை, நான்முகன் திருவிலங்கமூர்த்தி, தென்முகன் என உள்ளனர். இவருக்கு என ஒரு சண்டேசர் உள்ளார்.

ஆலயத்தைச் சுற்றிலும் அழகிய பூச்செடிகள், காய் கனி மரங்கள் ஆயினும் கோயில் அதிக மக்கள் வரத்தின்றி உள்ளதால் புள் புதர்கள் காணப்படுகிறது.

கோயில் சுத்தமுடன் இருத்தல் வேண்டும் என ஒவ்வொரு சன்னதியிலும், அகல் விளக்குகளை சிறு சிமென்ட் தொட்டியில் மணல் நிரப்பி அதில் வைக்குமாறு செய்துள்ளனர்.

- கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.