திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோயில் வளாகத்தில் நள்ளிரவு முதல் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு உற்சவரை வழிபட்டனர்.
தொடர்ந்து கண்ணாடி அறையில் உற்சவர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோயிலில் ஸ்ரீஜலநாராயணர் சந்நிதியில், அதிகாலை 4 மணிக்கு பூப்பந்தலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் தரிசனம் அளித்தார்.
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.