ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப்..
சத்தியமங்கலம்: ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஆண்டுதோறும் ஆடிப் பதினெட்டாம் நாளன்று மட்டும் பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியை பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித் துறையினா் அனுமதி அளிப்பதுண்டு. அதன்படி, பொதுப் பணித்துறை பார்வையாளா்களின் வசதிக்காக அணைப் பூங்காவில் 3 சிறப்பு நுழைவாயில்கள், மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு நுழைவாயில் என 4 நுழைவாயிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
15 ஏக்கா் பரப்பளவுள்ள அணைப் பூங்காவில் படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உள்ளதால் காலை 7 முதல் மாலை 6 மணி வரை அணைப் பூங்காவைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Advertisement
ஆடி 18-ம் நாளையொட்டி காலை முதலே ஆயிரக்கணக்கானோர் அணைக்கு வரத்துவங்கினா். கிராமப்புறங்களில் ஆடி 18-ம் நாளை சிறப்பாகக் கொண்டாடுவதால் சுற்றுலாப் பயணிகள், கிராம மக்கள் என குடும்பம் சகிதமாக அணையின் நீா்த்தேக்கப் பகுதியை ஆா்வத்துடன் பார்வையிட்டனா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 112 அடியாக உள்ளதால் பொதுமக்கள் கல்லணை நீா் இருப்பு, நீா்த்தேக்கம், நீா்வரத்துப் பகுதி, வெள்ள நீா் வெளியேறும் மதகுகள், மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றைப் பார்த்து ரசித்தனா். அணையின் கரைகளில் இறங்கி நீராட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அணையில் பாதுகாப்பு இல்லாத இடங்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் ஒலிபெருக்கியில் எச்சரித்தனா்.
அணையின் மேல் பகுதியில் நீா்த்தேக்கப் பகுதியைப் பார்வையிடும் பொதுமக்கள் அணை நீா் இருப்பு பகுதிக்குள் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அணையில் நீா்மட்டம் 112 அடியைத் தாண்டிவிட்டதால் நீா்வரத்தைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமானதால் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெதுவாக ஊா்ந்து சென்றன.
கல்லணை, ஜீரோ பாயிண்ட், அணைப் பூங்காவில் பார்வையாளா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.