திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் பிற மதங்களைச் சேர்ந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்து புதன்கிழமை உத்தரவிட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது பிற மதங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 45 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஹிந்து தார்மீக நிறுவனமான தேவஸ்தானத்தில் வேற்று மதத்தவர் பணியாற்றக் கூடாது என்று கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஊழியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பணியில் உள்ள பிற மதங்களைச் சேர்ந்த 45 ஊழியர்களையும் தேவஸ்தானம் பணியிலிருந்து நீக்கவும், அவர்கள் வகித்து வரும் பணிக்கு தக்கவாறு ஆந்திர அரசில் அவர்களுக்குப் பணி வழங்குமாறும் முறையிட்டது.
தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மனதால் ஹிந்து மதத்திற்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்து ஏழுமலையான் மீதும் பயபக்தி கொண்டு பணியாற்றி வருகிறோம்.
அதனால் எங்களை தேவஸ்தான பணியிலிருந்து நீக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிற மதங்களைச் சேர்ந்த 45 ஊழியர்களும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி தேவஸ்தான பணியிலிருந்து பிற மதங்களைச் சார்ந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.