சிதம்பரத்தில் புகழ்பெற்ற தில்லை காளியம்மன் கோயிலில் இன்று தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 13 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து புதன்கிழமையான நாளை தீர்த்தவாரியும், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும், 16-ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகின்றது.