திருமலையில் தங்கக் கவசம் இல்லாமல் உற்சவ மூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர்.
திருமலையில் ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 3 நாள்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்னும் ஆனித் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை திருமலையில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
அதற்கு முன் ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்கக் கவசம் களையப்படுவது வழக்கம். தங்கக் கவசத்தை அகற்றி, அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கி செப்பனிட்டு, அதற்கு பூஜைகள் செய்து மீண்டும் உற்சவ மூர்த்திக்கு அணிவிப்பது வழக்கம்.
ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசம் ஒருமுறை மட்டுமே களையப்படுகிறது.
அதன்படி, உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்கக் கவசம் புதன்கிழமை (19ஆம் தேதி) அகற்றப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, கவசம் செப்பனிடப்பட்டு வரும் 26ஆம் தேதி ஜேஷ்டாபிஷேக நிறைவு நாள் அன்று அணிவிக்கப்பட உள்ளது.
ஆனித் திருமஞ்சனத்தின் முதல் நாள் வைரக் கவசத்திலும், 2ஆம் நாள் முத்து கவசத்திலும் உற்சவ மூர்த்திகள் மாட வீதியில் வலம் வர உள்ளனர். ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ள நாள்களில் சில முக்கிய ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.