கழுகுமலை கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 21 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
9 -ஆம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை 6.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
கோ ரதத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேரும், சட்ட ரதத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமானும், வைரத்தேரில் கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர்கள் தெற்கு ரத வீதி, பேருந்து நிலைய சாலை, கோயில் மேலவாசல் தெரு, தெற்குரத வீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தன. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தவசுக் காட்சியும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பல்லக்கில் பட்டண பிரவேசம் நடைபெறுகிறது.