கந்தர் சஷ்டி விரதம் என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு ஸ்ரீ முருகப்பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். எல்லா சிவ ஆலயங்களிலும் இந்த ஆறு தினங்களும் முருகனுக்கு கந்தர் சஷ்டி உற்சவம் கொண்டாடப்பெறும். ஆறுபடை வீடுகளிலும் பிற முருகன் தலங்களிலும் இத்திருவிழா மேலும் சிறப்பாக நிகழும்.
விரத முறை
இந்த ஆறு நாட்களும் விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும். கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம். இக்காலங்களில் திருப்புகழ், கந்தர் சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.
ஆறு தினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால் பழம் சாப்பிடலாம். உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ, அல்லது இரவோ பலகாரமோ அல்லது பால் பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.