திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள மகா தீப கொப்பரை புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 14-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை கார்த்திகை தீப திருவிழாவுக்கான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக5 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொப்பரையில் தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க மேல்பாகம் மூன்றே முக்கால் அடியும், கீழ்பாகம் இரண்டேமுக்கால் அடியும் கொண்டவாறு, 150 கிலோ எடையில் 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.
இது புதுப்பிக்கப்பட்டு, கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வரும் 22-ம் தேதி மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.