முருகன் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவையொட்டி, புதன்கிழமை பல்லக்கு மற்றும் வெள்ளி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்தார்.
திருத்தணி முருகன் கோயிலில், மாசி பிரம்மோற்சவம், கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
தினமும், காலை, மாலை வேலைகளில் உற்சவர் முருகப் பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை, உற்சவர் முருகப்பெருமான் பல்லக்கு சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார். இரவு, 7 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்தார். புதன்கிழமை நடைபெற்ற பிரம்மோற்சவ விழா மற்றும் மாசி கிருத்திகை விழா என்பதால் மலைக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பக்தர்கள் மூலவரை பொதுவழியில் தரிசிக்க, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.