நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் மாசி மாதம் 1ம் தேதி, ஆங்கில மாதப்படி 13.02.2019 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் பிரவேசித்துள்ளார்.
பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்னைகள் தலைதூக்கலாம். உத்திராட நக்ஷத்திரத்தில் ராகுவும் - பூரட்டாதி நக்ஷத்திரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் - புதன் ராசியில் சஞ்சரிக்கிறார்.
கேது சூரியனுடைய நக்ஷத்திரம் - குருவின் ராசியில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் புதன் வீட்டில் இருக்கிறது. சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம்.
இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.
அதே வேளையில் கேதுவிற்கு முதல் கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் - கோவில் சம்பந்தமான பிரச்னைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் - நீர் - காற்று - ஆகாயம் - நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும்.