அமர்நாத் குகைக் கோயிலுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு சிம் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர் ரா.சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அமர்நாத் குகை கோயிலுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு இலகுவான செல்லிடப்பேசி தொலைத்தொடர்பு இணைப்பை அளிக்கும் பொருட்டு பிஎஸ்என்எல், ஜம்மு காஷ்மீர் தொலை தொடர்பு வட்டம் சார்பில், ஜூலை 1 முதல் 15 வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதர மாநில செல்லிடப்பேசி ப்ரீபெய்ட் இணைப்புகளைப் பயன்படுத்த ஜம்மு காஷ்மீரில் அனுமதியில்லை என்பதால், உள்துறை அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அனுமதியுடன், முன்கூட்டியே திறனேற்றப்பட்ட சிறப்பு யாத்ரா சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் அளிக்கிறது. சிறப்புக் கட்டண வவுச்சர் மற்றும் ப்ளான் வவுச்சர் உள்பட இதன் விலை ரூ. 230.
மேலும் விவரங்களை www.jandk.bsnl.co.in/Yatra.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.