முகப்பு
செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க வருவோருக்கு ஒரு கனிவான வேண்டுகோள்!

பட்டுடெக்க காஞ்சிபுரம் என்ற நிலை மாறி உலக மக்களால் பேசப்படுகின்ற குறிப்பாக தமிழ்நாட்டில்..

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:37 AM
பகிர்:

பட்டுடெக்க காஞ்சிபுரம் என்ற நிலை மாறி உலக மக்களால் பேசப்படுகின்ற குறிப்பாக தமிழ்நாட்டில் இன்றைய ஹாட் டாப்பிக் என்றால் அது அத்திவரதர் தான். ஆம்,  அருளாளன் அத்திவரதர் பெருவிழா காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து 24-வது நாளான இன்று மாம்பழ நிறப் பட்டுடுத்தி அருள்பாலிக்கிறார் அத்திவரதர். தன்னை தரிசிக்க வரும் கோடான கோடி பக்தர்கள் தாங்கள் கடந்துவந்து பாதையில் பலவித இன்னல்களும், இடர்களும் ஏற்பட்டு இருந்தாலும் அதை அனைத்தும் மறக்கச்செய்யும் அளவிற்கு அருளாளன் அத்திவரதர் தரிசனம் அனைத்தும் மெய்மறந்த போகும் அளவிற்கு வஸந்த மண்டபத்தில் வசந்தமாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமாள். 

காஞ்சிபுரத்தில் மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றுமே சிறப்புடையாகும். இந்திய நாட்டின் நூற்றெட்டுத் திருப்பதிகளில் முக்கியப் பதிகளாக உள்ள நான்கினில் ஒன்றாக விளங்குவது தான் வரதராஜப் பெருமாள் கோயில். முக்தி தரும் ஏழு புண்ணிய திருத்தலங்களில் காஞ்சியும் ஒன்று. காஞ்சிபுரம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காமாட்சி அம்மன் தான். இந்த காமாட்சி அம்மனை வணங்கினால் முப்பெரும் தேவியரை ஒருசேர வணங்கிய பலன் நமக்குக் கிடைக்கும். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்குப் பல பெருமைகள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே எந்த ஒரு கோயிலிலும் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இந்த கோயிலுக்கு உண்டு. அத்திமரத்திற்கு நீரில் ஊற ஊற பளபளப்பு அதிகரிக்கும். அதனால்தான் அத்திவரதரின் திருமேனி இன்று வரை பளபளப்பாகத் திகழ்கிறது. 

முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் காஞ்சி என்ற அளவுக்குப் பிரசித்தி பெற்ற திருத்தலத்தில் உள்ள அத்திவரதரைக் காணத் தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சியை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், சில பக்தர்களுக்கு மூச்சடைப்பு, வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கும், சுமுகமாக அத்திவரதரை தரிசித்துச் செல்வதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், பக்தர்கள் முக்கியமாக இந்த விஷயத்தைக் கவனிக்கவேண்டும். வயதில் முதியோர்கள், பிறந்து சில மாதங்களே ஆன சிறு குழந்தைகள், குறைந்தபட்சம் 5 வயதுள்ள குழந்தைகள் அத்திவரதர் தரிசனத்துக்கு அழைத்துவரமால் தவிர்ப்பது நல்லது. 

தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துவரும் நிலையில் குழந்தைகளும், முதியவர்களும் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, பக்தர்கள் இதைக் கனிவான வேண்டுகோளாக எடுத்துக்கொண்டு கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தரிசனம் செய்த பக்தர்களின் சார்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.