ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி நாள்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல, ஆடி அமாவாசையன்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்துக்கு வருகின்றனர். இதையொட்டி மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய செல்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிகழ் ஆண்டில் ஆடி அமாவாசை ஜூலை 31-ம் தேதி வருகிறது. இதையொட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களை ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மலை ஏறவும், இறங்கவும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தர மகாலிங்க சுவாமியைத் தரிசனம் செய்துவிட்டு, சன்னதிக்கு எதிரே உள்ள புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்புப் பாலத்தின் வலதுபுறமாக கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கோயில் வளாகம் மற்றும் மலைப் பாதைகளில் மின்னாக்கிகள் மூலம் செயல்படும் வகையில் மின்விளக்குகள் மற்றும் சூரியசக்தி விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. தாணிப்பாறை மற்றும் வாழைத் தோப்பு வழியாக பக்தர்கள் மலையேறும்போது குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டு வருகிறது.
மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை.
சதுரகிரி, தாணிப்பாறை, வாழைத்தோப்பு, காத்தடிமேடு, தனிராட்டி தீர்த்தம், சங்கிலிப்பாறை, இரட்டைலிங்கம் ஆகிய பகுதிகளில் அவசர சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப் பாதைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் பக்தர்களுக்கு உதவ போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதேபோல, தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் இருப்பர். மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நிலையில், பக்தர்களை மீட்க தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க காவல், தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.