ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் கோயிலிலும், வரதராஜப் பெருமாள் கோயிலிலும் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
கங்காதர ஈஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து துர்கையம்மன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் நடைபெற்றன. கோயில் திருப்பணிக் குழுவின் தலைவர் கு.சரவணன் தலைமையில் பிரம்மோற்சவக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்தி புறப்பாடும், இரவு சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஊர்வலமும் நடந்தது.
பிரம்மோற்சவத்தையொட்டி, வரும் 24-ஆம் தேதி வரை காலை, இரவு என இரு வேளைகளும் உற்சவங்கள் நடைபெற உள்ளன. கொடியேற்று விழாவில் மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லட்சுமணன் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.