மக்களவைத் தேர்தல் எதிரொலியாக திருமலையில் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு கூறியது:
ஆந்திரத்தில் வரும் ஏப்.11ஆம் தேதி சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், திருமலையில் எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அளிக்கும் பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும் திருமலையில் அரசியல் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அரசியல் பிரமுகர்கள் அரசியல் பேச்சு, பேட்டிகளைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடமிருந்து தேவஸ்தானத்துக்கு உத்தரவு வரும் வரை அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைக் கடிதங்கள் வழக்கம் போல் ஏற்றுக் கொள்ளப்படும். தேர்தல் ஆணைய உத்தரவுக்குப் பின் அவை ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.10 கோடி
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.4.10 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.15 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.8 லட்சம், வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
71,210 பேர் தரிசனம்
ஏழுமலையானை திங்கள்கிழமை 71,210 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,947 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பக்தர்கள் ஒரு காத்திருப்பு அறையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 6 மணிநேரம் வரை ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
சோதனைச் சாவடி வசூல் ரூ.1.79 லட்சம்
அலிபிரி சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 69,036 பயணிகள் கடந்துள்ளனர். 8,775 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.79 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.13,200 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.