காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா ஜூலை 14-ல் தொடக்கம்
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா வழக்கமான முறையில் சிறப்பாக நடத்துவது என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா வழக்கமான முறையில் சிறப்பாக நடத்துவது என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரைக்கால் கைலாசநாதர் கோயில் சார்பில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு இத்திருவிழா ஜூலை 14-ஆம் தேதி தொடங்கவுள்ளது. புனிதவதியார் என்னும் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அம்மையாரை திருமணம் செய்துகொள்ள பரமதத்தர் புறப்பாடும் (மாப்பிள்ளை அழைப்பு), ஜூலை 15-ம் தேதி பரமதத்தர் - காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணமும், ஜூலை 16-ம் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் கோயிலில் நடைபெறும் அமுது படையலுக்கு புறப்பாடு (மாங்கனி இறைத்தல்) நடைபெறுவதும், ஜூலை 17-ம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சித் தரும் நிகழ்வும் தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
இந்நாள்களில் சிவபெருமான் வெள்ளைச்சாற்றுப் புறப்பாடும், பரமதத்தர் 2-வது திருமணம் செய்துகொள்ளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது. அம்மையாருக்கென தனிக்கோயில் காரைக்காலில் பாரதியார் சாலையோரத்தில் அமைந்துள்ளது.
திருவிழாவின்போது பாரதியார் சாலையில் இருபுறங்களிலும் திருவிழா கடைகள் அமைக்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் 3 நாள்களில் நிறைவுபெற்றுவிட்டாலும், கலை நிகழ்ச்சிகளும், கடைகளும் ஒரு மாத காலம் தொடர்ந்து இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பகுதிக்கு வந்து செல்வர். இதுவே மாங்கனித் திருவிழாவின் சிறப்புகளாக இருந்துவருகிறது.
இந்நிலையில், திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்ட நிலையில், உத்ஸவத்தின் உபயதாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அம்மையார் மணி மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கைலாசநாதர் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர். கேசவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஏ.டி. ஆறுமுகம், பொருளாளர் டி. ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே. பிரகாஷ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, கோயில் சிவாச்சாரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவிழா நடக்கும் நாள்கள், ஒவ்வொரு நாளும் நடைபெறக்கூடிய வழிபாடுகள் குறித்தும் சிவாச்சாரியர்கள் விளக்கிப் பேசினர். வழக்கமான முறையில் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை, புறப்பாடு, அமுது படையல், திருக்கல்யாணம், காட்சித் தருதல் உள்ளிட்டவை போன்று நிகழாண்டும் நடத்தப்படுவது குறித்தும், வேறு ஆலோசனைகள் தெரிவிக்குமாறு அறங்காவல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.