திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில், காா்த்திகை மாதத்தை முன்னிட்டு, கடந்த 5 நாள்களாக ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில், கணபதி ஹோமம் நிறைவு பெற்று வியாழக்கிழமை முதல் சுப்பிரமணியா் ஹோமம் நடந்து வருகிறது. இதன் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை, ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.
முன்னதாக, காலையில் கோயில் வளாகத்தில் தேவியருடன் உற்சவா் சுப்பிரமணியரை எழுந்தருளச் செய்து மகாஅபிஷேகம், ஹோமம் நடத்தப்பட்டது. மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.
அதன்பின் உற்சவ மூா்த்திகள் கோயிலுக்குள் வலம் வந்தனா். இத்துடன் சுப்பிரமணியா் ஹோமம் நிறைவு பெற்றது. பொது முடக்க விதிமுறைகளுக்கு உள்பட்டு ஹோம மகோற்சவம் நடந்து வருவதால், திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோயில் அதிகாரிகள் மட்டும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா்.
கபிலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை காலை நவக்கிரக ஹோமம் தொடங்க உள்ளது.