முகப்பு
செய்திகள்

நவராத்திரியில் முறையாக விரதம் இருப்பது எப்படி?

நவராத்திரியில் அம்பாளை எப்படி முறையாக வழிபட்டு, விரதமிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

Updated On : 17 அக்டோபர், 2020 at 11:44 AM
How to fast properly on Navratri?
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM

நவராத்திரியில் அம்பாளை எப்படி முறையாக வழிபட்டு, விரதமிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாள்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். நடுவில் உள்ள மூன்று நாள்கள் ஞான சக்தியின் தோற்றமான லட்சுமியை நினைத்து வழிபட வேண்டும். இறுதி மூன்று நாள்கள் கிரியா சக்தியான சரஸ்வதியை பூஜிக்க வேண்டும்.

விரத முறை

Advertisement

நவராத்திரி விரதமிருப்பவர்கள் அமாவாசை தினத்தன்று ஒருவேளை மட்டும் உணவு உண்டு உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் பிரதமை திதியன்று நவராத்திரி கொலு ஆரம்பிக்கின்றது. முறையாக விரதமிருக்க நினைப்பவர்கள் தினமும் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, விரதமிருக்க வேண்டும். அதற்கு முன்னதாக அமாவாசையில் கொலு பொம்மையை அடுக்கி வைத்து விடலாம்.

காலையில் எழுந்து சுத்த பத்தமாக அம்பாளை வழிபட்டு, அம்மனுக்குரிய பாடல்களை பாடலாம் அல்லது கேசட் போட்டும் கேட்கலாம். இரவு பூஜை முடித்துவிட்டு அதன்பிறகு உணவு உட்கொள்ளலாம். அதுவரை, என்னால் பசி தாங்க முடியாது என்பவர்கள் பகல் உணவாக ஒருவேளை உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவு பால், பழம், உட்கொண்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

நவராத்திரி கொலுவில் கும்பம் வைப்பது மிகவும் முக்கியமானது. நறுமணம் மிக்க சந்தனம், பூ இவைகளோடு மாதுளை, வாழை, பலா முதலியவற்றை அம்பாளுக்குப் படைக்கலாம். கும்பத்தில் புனுகு, கோரோனை, பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ இவற்றுடன் பன்னீர் சேர்த்து கும்பம் வைத்து அதைப் பிரதான அம்மனாக வைத்து வழிபடலாம்.

நவராத்திரியில் குமாரி பூஜை மிகவும் பிரதானமானவை. வீட்டில் கொலு வைப்பவர்கள் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை அழைத்து அவர்களை அம்மனாகப் பாவித்து, அவர்களுக்குத் தேவையான பொட்டு, வளையல், உணவு, இனிப்பு பலகாரம் ஆடை கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் முப்பெரும் தேவியரின் அருள் நமக்குப் பரிபூரணமாக கிடைக்கும்.

விரதமிருப்பவர்கள் 9-ம் நாளான நவமி அன்று முமுமையாக விரதம் இருக்க வேண்டும். அன்று தான் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம். அன்றைய தினம், குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், நாம் பாராயணம் செய்யும் புத்தகங்கள்  வைத்து வழிபட வேண்டும்.

அடுத்த நாள் விஜயதசமியன்று சுவையான பலகாரங்கள் செய்து அம்பாளுக்குப் படைத்து நிவேதனம் செய்து, பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்து பிள்ளைகளுக்கு படிக்கக் கொடுக்கலாம். அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்பாளை வழிபட வேண்டும். இவ்வாறு 10 நாள்களும் சிரத்தையுடன் அம்பாளுக்கு உபவாசம் இருந்து விஜய தசமி அன்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு முறையாக விரதமிருந்தால், வாழ்வில் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். இதுபோன்று ஒன்பது வருடங்கள் தொடர்ச்சியாக விருதமிருப்பவருக்கு வாழ்வில் எந்தக் குறையும் இருக்காது. நமக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது புண்ணியமாகும். கலைமகளும், மலைமகளும், திருமகளும் வம்சத்திற்கு அருள்புரிவார்கள் என்பது நிச்சயம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.