மானாமதுரை பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சண்டீ ஹோமம்
அதிருத்ர சஹஸ்ர சண்டீ யாகத்தில் 10 வது நாளாக திங்கள்கிழமை ஸமக்ரபஷ சண்டீ யாகம் நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் 19 ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் அதிருத்ர சஹஸ்ர சண்டீ யாகத்தில் 10 வது நாளாக திங்கள்கிழமை ஸமக்ரபஷ சண்டீ யாகம் நடைபெற்றது.
அன்னதானத்திற்கு பெயர்போன மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் கடந்த 7 ஆம் தேதி அதிருத்ர சஹஸ்ர சண்டீ மஹா யாகம் தொடங்கியது.
யாகத்தின் முக்கிய ஹோமமாக கடந்த 12 ஆம் தேதி குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி புத்திர காமேஷ்டி ஹோமம் நடத்தப்பட்டது. இதில் குழந்தை வரம் வேண்டி ஏராளமான தம்பதியினர் பங்கேற்றனர்.
Advertisement
அதைத்தொடர்ந்து மாலையில் வன துர்கா ஹோமம் நடந்தது. 13- ஆம் தேதி திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது.
தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் கூடி இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி ஒவ்வொரு நாள் காலையிலும் பல்வேறு மலர்களால் யாக சாலையில் உள்ள பிரத்தியங்கிரா தேவி உருவ படத்திற்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. காலையில் தொடங்கும் யாகம் இரவு வரை நடைபெறுகிறது.
யாகத்தின் 10 ஆவது நாளாக திங்கள்கிழமை காலையில் அதர்வ கணபதி ஹோமம் நடத்தப்பட்டு அதைத் தொடர்ந்து ஸமக்ரபஷ சண்டீ ஹோமம் நடைபெற்று வருகிறது.
யாகத்திற்கான ஏற்பாடுகளை மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா அறக்கட்டளை நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்துள்ளார்.