வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: பேராலய அதிபர் வேண்டுகோள்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் பங்கேற்க வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ. எம். ஏ பிரபாகர் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் : கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் பங்கேற்க வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ. எம். ஏ பிரபாகர் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை ஆண்டு பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த நிலையில், கரோனா தடுப்பு நடிகைகளின் கீழ், நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ.எம். பிரபாகர் அடிகளார் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தவை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வரும் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கொடியேற்றம், நவநாள் வழிபாடுகள், சிறப்பு திருப்பலிகள், அலங்கார தேர்பவனி, மாதா பிறந்த நாள், கொடி இறக்கம் என ஆண்டுப் பெருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இருப்பினும் கரோனா தொற்றுப் பரவலில் இருப்பதன் காரணமாக ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுத்துயுள்ளது. எனவே, பக்தர்கள் யாரும் விழாவில் பங்கேற்க ஆலயம் வருவதை தவிர்க்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களும் தங்கள் வருகையைத் தவிர்க்க வேண்டும்.
பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்வுகள் அனைத்தையும் பேராலய இணையதளம், தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் வாயிலாக கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பக்தர்கள் ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதை தவிர்த்து, அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
ஆண்டுப் பெருவிழா நவநாள்களில், புனித ஆரோக்கிய அன்னை, குழந்தை இயேசுவுடன் பக்தர்களின் இல்லம் தேடி வந்து அன்பு, நலம், மகிழ்ச்சியை அருள்வாராக என்றார்.