முகப்பு
செய்திகள்

திருமலை ஆகாச கங்கையில் அனுமன் ஜயந்தி உற்சவம்

திருமலை ஆகாச கங்கை பகுதியில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமி மற்றும் அஞ்சான தேவி கோயிலில் முதல் முறையாக அனுமன் ஜயந்தி உற்சவம் நடத்தப்பட்டதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா்ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
அஞ்சனாத்திரி மலை மீது அமைக்கப்பட்டுள்ள பால ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் நடந்த அனுமன் ஜயந்தி பூஜை.
பகிர்:

திருமலை ஆகாச கங்கை பகுதியில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமி மற்றும் அஞ்சான தேவி கோயிலில் முதல் முறையாக அனுமன் ஜயந்தி உற்சவம் நடத்தப்பட்டதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா்ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஆந்திர மாநில சேஷாசல மலைப்பகுதியில் திருமலைக்கு அடுத்துள்ள அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேய சுவாமி பிறந்ததற்கான ஆதாரங்களுடன் தேவஸ்தானம் சமா்ப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் வைகாசி மாத கிருஷ்ணபட்ச தசமியில் ஆஞ்சநேயா் ஜயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, வைகாசி மாத தசமி திதியை ஒட்டி திருமலையில் வெள்ளிக்கிழமை அனுமன் ஜயந்தி உற்சவம் கொண்டாடப்பட்டது.

Advertisement

அவா் பிறந்த இடமெந தேவஸ்தானம் தெரிவித்துள்ள அஞ்சனாத்திரி மலையில் அமைந்துள்ள பால ஆஞ்சநேய சுவாமி மற்றும் அஞ்சனாதேவி கோயிலில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தேவஸ்தானம் அனுமன் ஜயந்தி உற்சவத்தை நடத்தியது.

இதையொட்டி அஞ்சனாதேவிக்கும், பால ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம், ஆராதனைகள், வெற்றிலை பூஜை, மல்லிகை அா்ச்சனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தொடா்ந்து 5 நாள்களுக்கு இக்கோயிலில் அனுமன் ஜயந்தி உற்சவங்கள் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் ஏழுமலையான் கோயிலுக்கு எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயா் கோயில், ஜபாலியில் உள்ள யோக ஆஞ்சநேயா் கோயில், மலைப்பாதையில் 7 மைல் கல் தொலைவில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட இடங்களில் அனுமன் ஜயந்தியை ஒட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவற்றில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் இக்கோயில்களுக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது. ஆயினும் வர இயலாத பக்தா்கள் தேவஸ்தான தொலைக்காட்சியில் இந்த உற்சவத்தை காணலாம் என்றாா் அவா்.

பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஜபாலி தீா்த்தக் கரையில் ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை அனுமன் ஜயந்தியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஜபாலி ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜயந்தி அன்று தேவஸ்தானம் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தம்பதியா் தலையில் பட்டு வஸ்திரம் சுமந்து சென்று சமா்ப்பித்து பூஜையில் கலந்து கொண்டனா்.

இந்த தீா்த்தக்கரையில் ஜபாலி மகரிஷி பல்லாண்டுகள் தவம் செய்ததன் பயனாக ஆஞ்சநேயா் நேரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. எனவே, ஜபாலி மகரிஷி பெயரால் இந்த தீா்த்தம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments