எடப்பாடி தவெக வேட்பாளரை காணவில்லை! வேட்புமனு நிராகரிப்பு!
எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பற்றி...
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 7,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று காலை முதல் பரிசீலனை செய்யப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், சிதம்பரம் தவெக வேட்பாளர் பாரி, அவரது வேட்பு மனுவை முழுமையாக நிரப்பவில்லை என்று கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த பாரியின் தந்தை நெடுஞ்செழியனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
தற்போது எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண் குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவை முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் அருண் குமாரின் வேட்புமனு ஏற்க முடியாது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை எடுத்து வருவதற்காக சென்ற அருண் குமாரை யாரோ கடத்திவிட்டதாக தவெக தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் அதிமுக - திமுகவுக்கு நேரடிப் போட்டி நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.