முகப்பு
செய்திகள்

மானாமதுரை பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனி உற்சவ வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தின் முதல் சனி உற்சவ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் உற்சவர் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தின் முதல் சனி உற்சவ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. 

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை என்பது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்ததாகும். இதையொட்டி மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

மூலவர் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் முன் மண்டபத்தில் தெற்குமுகம் நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கும் மகுடம் தரித்த வீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிக்கு மலர் மாலைகள், வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. 

Advertisement

மேலும் வீர அழகர் கோயிலின் காவல் தெய்வமான கோயில் நுழைவாயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கும் தீர்த்தக்கரை ராக்கச்சி அம்மனுக்கும் அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. புரட்டாசி மாதத்தின் முதல் சனி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வீர அழகர் கோயிலுக்கு வந்து கருப்பண சுவாமியையும் சுந்தராஜப் பெருமாளையும் வீர ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்தனர்.

மானாமதுரையில்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த தெற்கு முகம் நோக்கிய மகுடம் தரித்த ஸ்ரீ வீர ஆஞ்சனேயர்

மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக வினோதப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனி உற்சவ வழிபாடு நடைபெற்றது. மூலவர் தியாகராஜப் பெருமாளுக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தியாக விநோதப் பெருமாளை தரிசனம் செய்தனர். 

மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பல பெருமாள் கோயில்களிலும் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் உள்ள பெருமாள் கோயிலிலும் புரட்டாசி மாதத்தின் முதல் சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments