விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை மக்களவை உறுப்பினர் செல்வி ஜோதிமணி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கிவைத்தார். மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமை என 9 பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜை நேற்று தொடங்கியது. இதில் மங்கள இசையுடன், பக்தி பாடல்கள் பாடி ஆயிரக்கணக்கான பெண்கள் விளக்குப் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
அதேபோல மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் 34ம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று அதிகாலை தொடங்கியது. இப்பூஜை வரும் தை மாதம் 1ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் ஒன்பது விளக்குப் பூஜையின் முதலாவது திருவிளக்கு பூஜை கோமாதா பூஜையுடன் தொடங்கியது.
இதில் 4004 பெண்கள் பங்கேற்று அம்மன் பக்தி பாடல்களைப் பாடி விளக்குப் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற எம்பி ஜோதிமணி பெண்களுடன் தரையில் அமர்ந்து விளக்குப் பூஜை செய்து வழிபட்டார். இதுபோன்ற பூஜைகள் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் ஆயுட்காலம் கூடும், கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
விழாவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், விராலிமலை திமுக ஒன்றிய செயலாளர் இளங்குமரன்(மேற்கு), அய்யப்பன்(மத்தி), ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி(விராலிமலை), ஜெயலட்சுமி குமார்(வடுகபட்டி),காங்கிரஸ் வட்டார தலைவர் சட்டையப்பன், அன்பு, ராஜா குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா நாள்களில் அம்மன் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை குருக்கள் சுந்தரம் சுவாமிகள் தலைமையில் அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.