ஆடி அமாவாசை: சதுரகிரிக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு இன்று முதல் மலையேற அனுமதி..
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல இன்று(ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5)வரை பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த வனத் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் அனுமதி வழங்கியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்பட 8 நாள்கள் அனுமதி வழங்கப்படும்.
அதன்படி ஆடி மாத பிரதோஷம், ஆடி அமாவாசைக்காக இன்று முதல் 5-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பக்தா்கள் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
சதுரகிரி மலையேற காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவர். பேருந்து நிறுத்தம் அருகே 200 பக்தா்கள் தங்கும் வகையில் தற்காலிகக் கொட்டகை அமைக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களும், 6 இடங்களில் வாகனக் காப்பகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சதுரகிரி மலைப் பாதையில் 21 இடங்களில் குடிநீா் வசதியும், 4 இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தானிப்பாறை அடிவாரத்தில் ஒருங்கிணைந்த உதவி மையம் செயல்படும். 1,600 போலீஸாா், 200 தீயணைப்பு, பேரிடா் மீட்பு படையினா், வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
கோடை வெயில் காரணமாக ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி, வனப் பகுதி வடு காணப்படுவதால், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு வர வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.