நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தைத் திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமணக் கோலத்தில் நாகவல்லி - நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தனுர் லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
பின்னர், இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11 ஆம் தேதி திருக்கல்யாணமும், 13 ஆம் தேதி சனிக்கிழமை திருத்தேரோட்டம், 14 ஆம் தேதி கடை ஞாயிறு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.