அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி, தலைநகர் தில்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதில், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும் அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கும் சென்று ஆலோசனை செய்தோம். அரசியல் கட்சி பிரதிநிதிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துகள் பெறப்பட்டன.
தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர்கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
வெளிப்படையான முறையில் நியாயமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மொத்தம் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி. 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும். தேனி வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்டவை செய்து தரப்படவுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
அசாம், கேரளம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச். 16-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி மார்ச். 23. வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதி மார்ச் 26. தேர்தல் நடைமுறைகள் மே 6-க்கு முன் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Elections are to be held in a single phase on April 9 for the states of Assam and Kerala, and the Union Territory of Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.