முகப்பு
தமிழ்நாடு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலம்

Updated On : 31 டிசம்பர், 2025 at 10:55 AM
பரமபத வாசலை கடக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி
பகிர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வைகுந்த ஏகாதசியையொட்டி பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு பகல்பத்து நிகழ்ச்சி, சென்ற டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி நேற்று (டிச - 29) திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

இதில், ஒவ்வொரு நாளும் உற்சவப் பெருமாள் ராஜகோபாலசாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, வைகுந்த ஏகாதசி இராப்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை, பரமபத வாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

அப்போது, உற்சவப் பெருமாள் ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

பின்னர் சுவாமி, பரமபத வாசல் கடக்கும் போது, பக்தர்கள் கோபாலா... கோபாலா ...என பக்தி கோஷம் எழுப்பி வழிப்பட்டனர்.

நிகழ்ச்சியில், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கருடா சி.இளவரசன், அறங்காவலர் குழு உறுப்பின்கள் கே.கே.பி.மனோகரன், வெ.லதா, மு.சிவகுமார், செயல் அலுவலர் எஸ்.மாதவன், மண்டாகப் படித்தார் எஸ் .காமராஜ் மற்றும் கோயில் அலுவலர்கள், திரளான பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர்,சுவாமி சந்நதிக்கு வந்தபிறகு, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். இராப்பத்து நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →