ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர் - பகுதி 3 - பூந்தோட்டம் சிவன்கோயில்
ஆலங்குடியை சுற்றி எட்டு திக்கிலும் அட்டதிக்கு பாலகர்கள் பிரதிட்டை செய்து வழிபட்ட கோயில்கள் உள்ளன. அதில் வருணன் வழிபட்ட கோயில் பூந்தோட்டம் எனும் இடத்தில் உள்ளது.
ஆலங்குடியை சுற்றி எட்டு திக்கிலும் அட்டதிக்கு பாலகர்கள் பிரதிட்டை செய்து வழிபட்ட கோயில்கள் உள்ளன. அதில் வருணன் வழிபட்ட கோயில் பூந்தோட்டம் எனும் இடத்தில் உள்ளது. இந்த பூந்தோட்டம் ஆலங்குடியின் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது.
சிறிய கிராமம், அதில் இடது புறம் பேருந்து நிறுத்தம் உள்ளது அதன் எதிரில் ஒரு சிறிய பெட்டிக்கடை இருக்கும் அதனை அடுத்து இரண்டு சிறிய ஒட்டு வீடுகள் உள்ளன. இந்த ஓட்டுவீடுகளின் இடையில் உள்ள சிறிய சந்தின் வழி சென்றால் சில நூறடிகளில் ஒரு சிறிய குட்டையின் கரையில் ஒரு திடல், அதன்பெயர் லிங்கத்தடி திடல். அதில் சிறிய தகர கொட்டகையில் தான் எம்பெருமான் வருணேஸ்வரர் எனும் பெயரில் வருணனால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு உள்ளார். இவரை வழிபடுவதன் மூலம் நிலம், நீர் இவற்றிக்கு வாழ்நாளில் பஞ்சமில்லாமல் வாழலாம். அருகில் உள்ள குட்டை தான் வருணன் ஏற்ப்படுத்திய வருண தீர்த்தம்.
சில நூறு ஆண்டுகளின் முன் பெரிய பிரகாரத்துடன் இருந்த கோயில் சிதிலமடைந்து தற்போது லிங்கம் , பைரவர் மட்டும் எஞ்சியது. அந்த ஒரு லிங்கத்திற்கு அன்பர்கள் சேர்ந்து ஒரு தகர கொட்டகை ஒன்றை அமைத்திருந்தனர்.
Advertisement
இதில் வருத்தம் என்னவென்றால் அந்த ஒரு தகர கொட்டகையையும் கஜா புயல் சாய்த்துவிட்டு சென்றுவிட்டது. சிறிதளவு நகர்த்தி உள்ளே சென்று இறைவனை காணும் அளவிற்கு இடம் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
சிறிய லிங்கமாக வருணேஸ்வரரும், புதிதாய் வைக்கப்பட்ட அம்பிகை தென்கோவலவல்லியும் உள்ளனர். இறைவனின் எதிரில் அவரது வாகனம் நந்தி உள்ளது. பழமையான பைரவர் உள்ளார் இதை கண்ணுறும் அன்பர்கள் சிறிய தகர கொட்டகை ஒன்று எம்பெருமானுக்கு ஏற்ப்படுத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடம்பூர் விஜயன் - 9842676797