வளர்ச்சி
ஒரு நண்பர் 'முள்ளும் மலரும்' படத்திலிருந்து 'நண்டு' வரை எடுத்துக்கிட்டா டைரக்டர்ங்கிற முறையில வளர்ச்சி அடைஞ்சிருக்கீங்களா? ன்னு கேட்டார். வளர்ந்து விட்டதாக நான் எந்த சூழ்நிலையிலும் நினைக்கிறதேயில்லை. வளர்ந்திட்டோம்னு என்றைக்கு நினைக்கிறோமோ அன்றைக்கே தளர்ச்சியை நோக்கி போய்கிட்டிருக்கோம்னு அர்த்தம்.எல்லாமே ஆரம்பம்தான்!
என் மனசுல எவ்வளவோ செய்யணும்னு நினைச்சிருக்கேன். அதையெல்லாம் நினைச்சு பார்க்கும் போது இதுவரை செஞ்சதெல்லாம் ஆரம்பம்னுதான் நினைச்சுக்குவேன் மன நிறைவு இல்லாததையே என் மன நிறைவா நான் நினைக்கிறேன். இதை இதை செய்து முடிக்கலியேன்னு ஏற்படுற அதிருப்திதான் என்னோட திருப்தி.
ஒருமைப்பாடு
சிலர் மொழி தெரியாதவங்கள அறிமுகப்படுத்தறதாக குறைபட்டுக்குறாங்க. அது தவறான வாதம். ஒரு சுரேஷையும் அஸ்வினியையும் என் படத்தில நடிக்க வைச்சேன்னா, புதியவங்கள அறிமுகப்படுத்தணும்கிற ஆவல்தான். அதுக்காக தமிழ் தெரிஞ்சவங்கள பயப்படுத்தாம இல்ல.தேசிய ஒருமைப்பாடுன்னு சொல்றோமே , எப்படி?
யூனிட்
ஒரு படத்தின் வெற்றிக்கு யூனிட் ஒர்க்கும் முக்கிய காரணம். நாங்க ஒரு யூனிட்டா, குடும்ப பாங்கோட நம்பிக்கையா ஒர்க் பண்றோம். நல்ல யூனிட்டை வச்சு படம் பண்றதுல, எவ்வளவோ நன்மை இருக்கு. என்னை நம்பி படம் எடுக்கறவங்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய வகையில்தான் யூனிட் வச்சு படம் எடுக்கிறேன்.
செண்டிமெண்ட்
எனது திரைக்கதையில் வரும் சில சம்பவங்கள் என் வாழ்கையில் நடந்தவைதான். சிலர் செண்டிமெண்ட், ஆன்டி செண்டிமெண்ட் என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டி செண்டிமெண்ட் என்பதாக ஒன்று கிடையாது. எல்லாமே சென்டிமென்ட்தான்.
நாம ரொம்ப முன்னேறியாக்கணும். வேகமான வளர்ச்சி தேவை.
எச்சரிக்கை
ஒரு படம் வெற்றியடையும் போது அடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவர் என்னை பாராட்டும் போது எனக்கு ஏற்படுவது மயக்கம் அல்ல தயக்கம்தான்.
பேட்டி: சுடர்வண்ணன்
படங்கள்: ரவி.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)