‘என்னுடைய பற்றுகள் அற்றுப்போக வேண்டும்’ என்று வேண்டும் இப் பாடல் காஞ்சீபுரத்துக்கானது,
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறு வரையில் உள்ள எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று-மூன்று (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன.
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் தனதான
கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
கருத்திற்கட் பொருட்பட்டுப் பயில்காலங்
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமனாவி
பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
பிணத்தைச்சுட் டகத்திற்புக் கனைவோரும்
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டளைத்துத்தொக் கறக்கத்துப்
பிறப்புப்பற் றறச்செச்சைக் கழல்தாராய்
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்
புனக்கொச்சைக் குறத்தத்தைக் கினியோனே
புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
புணர்த்தப்பித் தனைக்கற்பித் தருள்வோனே
செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும்வீரா
திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
திருக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.