கண்கள் ஒன்றே காதல் செய்யும்
களமாய் நின்றே கொல்லும் - எங்கும்
கண்கள் பின்னே மனமும் வந்து
கவிதை சொல்லி வெல்லும்!
வாளோ வேலோ எதுவும் இன்றி
வன்மம் காட்டிப் போகும் - இங்கு
தேளாய்க் கொட்டும் நாவும் கூடத்
திணறித் தானே நோகும்!
நோயும் தந்து மருந்தும் ஆகி
நொடியில் தாக்கிப் பார்க்கும் - எரியும்
தீயும் நொடியில் தண்ணீர் ஆகும்
திறமை இதுவே ஆர்க்கும்
மனதின் வார்த்தை மெல்ல வந்து
மாய்க்கும் கண்கள் வழியே - எந்தச்
சினமும் இங்கே செல்லாக் காசாய்
சிறுத்தே நீக்கும் பழியை!
சீறிப் பாய்ந்தே நம்மைத் தாக்கும்
செதுக்கும் அம்பைக் கொண்டு - என்றும்
ஆறிப் போகா வடுக்க ளீயும்
ஆற்றல் இதற்கே உண்டு!
அன்பு கொண்டே ஆளும் உள்ளம்
ஆசை கொண்டால் தீதே - நல்லப்
பண்பைக் கொண்டே உலகை வெல்ல
படைப்போம் புதிய பாதை!