பாடல் - 11
பாதம் அடைவதன் பாசத்தாலே
மற்ற வன் பாசங்கள் முற்றவிட்டுக்
கோதுஇல் புகழ்க் கண்ணன்தன் அடிமேல்
வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதுஇல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து இசையோடும் வல்லார்
ஆதும் ஓர் தீதுஇலர் ஆகி இங்கும்
அங்கும் எல்லாம் அமைவார்கள்தாமே.
எம்பெருமானின் திருவடிகளைப் பற்றவேண்டும் என்கிற பாசத்தாலே, மற்ற கொடுமையான பாசங்களையெல்லாம் துறந்தவர், வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபர், குற்றமில்லாத புகழையுடைய கண்ணனின் திருவடிகளைப்பற்றித் தீமையில்லாத ஆயிரம் திருப்பாடல்களை அந்தாதியாகப் பாடினார் அவர். அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் இசையுடன் பாட வல்லவர்களுக்கு எந்தத் தீங்கும் வராது, அவர்கள் இந்த உலகத்திலும் பரம பதத்திலும் எல்லாம் பெற்றுச் சிறப்பார்கள்.