பாடல் 4
உம்பர் அம் தண் பாழேயோ, அதனுள் மிசை நீயேயோ,
அம்பரம், நற்சோதி, அதனுள் பிரமன், அரன் நீ,
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ,
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போரவிட்டிட்டாயே.
எல்லாவற்றுக்கும் மேலான, அழகிய, குளிர்ந்த மூலப்பகுதி நீயே, அதனுள் இருக்கும் ஆன்மாக்களும் நீயே, வானமும் நீயே, நல்ல ஒளியும் நீயே, அதனுள் இருக்கும் பிரமனும் சிவனும் நீயே, தேவர்களையும் மற்ற மனிதர்களையும் படைத்த முனிவனும் நீயே, அத்தகைய பெருமானான நீ, என்னைக் காப்பதாக ஏற்றுக்கொண்டாய், பின்னர் என்னை இங்கேயே போட்டுவிட்டாயே!