தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை... - சி.இளங்கோ; பக்.112; ரூ.80; அலைகள் வெளியீட்டகம், 5/1ஏ, இரண்டாவது தெரு, , நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-89.
தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள தொல்லியல் ஆய்வுகள் உதவுகின்றன. இந்நூல் அத்தகைய ஆய்வுகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் கொற்றலையாற்றுப் படுகை, அத்திரம்பாக்கம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் கிடைத்த பல்வேறு கல் ஆயுதங்கள், கற்கால மனிதர்கள் தங்கியிருந்த குகைகள், கைக்கோடரிகள், தென்னார்க்காடு, வடஆர்க்காடு, தர்மபுரி, நீலகிரி மலைத்தொடர், தேனி மாவட்டப்
பகுதிகள், மதுரை அருகேயுள்ள குன்றுகளில் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் போன்ற ஆதாரங்கள் தமிழகத்தின் கற்கால மனிதர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
ரோம் நாட்டுடன் தமிழகத்துக்கு இருந்த உறவை உறையூர், வசவசமுத்திரம், காரைக்காடு, கரூர், காஞ்சிபுரம், கொற்கை, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் கிடைத்த ரோம் நாட்டு மண் பொருட்கள், கிடைத்த ரோமானியர்களின் காசு புதையல்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அரிக்கமேடு, அழகன்குளம், காஞ்சிபுரம், பொருந்தல், ஆதிச்சநல்லூர், கொடுமணல், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் தமிழக வரலாற்றைப் பற்றிய பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு தமிழர்களின் வரலாற்றுக் காலத்தை 2000 ஆண்டுகள் என்று கூறுவதில் இருந்து அதற்கும் முன்பாக 1000 ஆண்டுகள் முன்னோக்கிச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளை நமக்களித்திருப்பதாக நூலாசிரியர் கூறுவது குறிப்பிடத்தக்கது.