விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்) - புலவர் வே.பதுமனார்; பக்.224; ரூ.200; செயக்கொடி பதிப்பகம், குடியேற்றம்-2 ; 04171- 221703.
தமிழைப் படிப்பது, பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் எல்லாம் ஆர்வமற்று தமிழ்மக்கள் இருப்பதை எண்ணி வருந்தி, இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல். இயற்கையோடியைந்து தமிழ் எப்படி உருவாகி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர்.
வீட்டில், கடைகளில், ஊடகங்களில், திரைப்படங்களில், சின்னத்திரையில் எல்லாம் நல்ல தமிழ் பேசப்படுவதில்லை என வருந்தும் நூலாசிரியர், "ஒரு மொழி எப்போது பேச்சு வழக்கை இழந்துவிடுகிறதோ அப்போதே அது செத்த மொழி ஆகிவிடுகிறது' என்பதனால் தமிழர்கள் தமிழில் பேச வேண்டும் என்கிறார். "எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். அதற்காக தாய்மொழியைக் கைவிடலாமா?' என்ற நூலாசிரியரின் கேள்வி மனதைத் தொடுகிறது.
நமது வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள பாடங்களைத் தமிழிலேயே கற்றுத் தர வேண்டும். புதிய சொற்களைத் தமிழில் உருவாக்க வல்லுநர் குழுவை ஏற்படுத்த வேண்டும். வேற்று மொழி கலவாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும் என தமிழைக் காக்க நூலாசிரியர் கூறும் கருத்துகள் எண்ணிப் பார்க்கத் தக்கவை.
பிறமொழி கலந்த சொற்களைக் கண்டறிய தேவநேயப் பாவாணர் வழங்கிய பைந்தமிழ்க் கொடையும் நூலில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய சிறந்த நூல்.