ஆறங்கம் (அரசியல் நாவல்) - ஆர். நடராஜன்; பக்.208; விலை குறிப்பிடப்படவில்லை; ஆதாரம்வெளியீடு, ஸ்ரீ பத்மாவதி நிவாஸ், 2-ஆவது தளம், 2/9, டாக்டர் சதாசிவம் சாலை, தி. நகர், சென்னை - 17.
அரசியல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த ஒவ்வொருவரும், அரசியல் - அரசியல்வாதிகள் குறித்த அவர்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல சாமானியர்களும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவையெல்லாம் இந்நூலுக்கு வலு சேர்த்திருக்கின்றன.
நாட்டை ஆளும் தலைவனுக்கு (அரசர்) தேவையான ஆறு உறுப்புகள் என்று சொல்லக்கூடிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றையும், ஆறு வேதாங்கங்களையும் சுற்றி நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இந்நூலுக்கு ஆறங்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் நாவலாசிரியர்.
இந்த நூலில் இடம்பெற்று பரவலாக அனைவராலும் அறியப்பட்ட இன்றைய அரசியல்வாதிகளின் வாழ்க்கையில், ஆட்சியில், அரசு அதிகாரிகளிடையே நடந்து கொண்டிருக்கும் லஞ்சம் - ஊழல்களை கற்பனை உரையாடல் என்ற பெயரில் தந்திருக்கிறார். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கேற்ப, அரசியல் களத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் சம்பவங்கள், ஊழல்கள் ஆகியவற்றை அவர்களாகத் திருந்தினால் ஒழிய மாற்ற முடியாது.
நூலில் இன்றைய அரசியல் நிகழ்வுகளை, நான்கு புராண கதாபாத்திரங்கள் அவர்களுக்குள் உரையாடுவது போலவும், அவர்களில் சிலருக்கு பாடம் கற்றுத்தருவது போலவும் சித்திரிக்கும் இந்நாவலை சமகாலத்தின் அதிர்வலைகள் எனலாம்.