பாடல் 7
விளக்கம்
பதிகத்தின் முதல் நான்கு பாடல்களில், பெருமான் தனக்கு உதவியதை நினைவுகூர்ந்து மனம் நெகிழும் அப்பர் பிரான், தனது உள்ளத்தில் பெருமான் என்றும் நீங்காது நிலவுவதாக இந்த பாடலில் கூறுகின்றார். தனது மனதினில் இறைவன் உறைவதாக கூறிய அப்பர் பிரானுக்கு இறைவன் மூர்த்தமாக உறையும் பல சோழ நாட்டுத் தலங்கள் நினைவுக்கு வந்தன போலும். சில தலங்களை இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
நெருப்பினை ஒத்து சிவந்த நிறத்து மேனியின் மேல் வெண்ணீறு அணிந்தவனாக காணப்படுபவனும், மிகுந்த விருப்பத்துடன் எனது உள்ளத்தில் நீங்காது நிலைபெற்று இருப்பவனும், வேதம் ஒதுபவனும், வேதத்தை நன்கு உணர்ந்தவனும், திருவெண்காடு அகன்ற காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள திருத்துருத்தி இடைமருது ஈங்கோய்மலை ஆகிய தலங்களில் நீங்காது உறைபவனும், என்னை ஆட்கொண்டவனும், கயிலை மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் தலத்து இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.